( மின்மினி மின்ஹா )
இலங்கை சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை ஏனைய கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஐக்கிய காங்கிரஸின் ஊடகப் பேச்சாளரும் இலங்கை உலமா கட்சியின் தேசியத் தலைவருமான முபாரக் அப்துல் மஜீத் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல சிறைச்சாலைகளில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கொலை, திருட்டு, வன்முறை, போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஒரே மண்டபத்தில் அடைக்கப்படுவது பாரிய சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதாரண குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்படுபவர்கள், போதைப்பொருள் பாவிப்பவர்களுடன் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படுவதன் காரணமாக, அவர்களும் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிலர் பின்னர் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்திலும் ஈடுபடத் தொடங்குவதால், சிறைச்சாலைகளுக்குள்ளேயே புதிய போதைப்பொருள் வியாபாரிகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இந்த நிலைமையைத் தடுக்கும் வகையில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தனித்தனி மண்டபங்கள் ஒதுக்கப்பட்டு, ஏனைய கைதிகளுடன் கலக்காமல் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைச்சாலைகளில் கைதிகளை குற்றத்தின் தன்மை மற்றும் ஆபத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாகப் பிரித்து தங்க வைப்பதன் மூலம், போதைப்பொருள் பழக்கம் பரவுவதையும் எதிர்கால குற்றச்செயல்களையும் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்த முபாரக் அப்துல் மஜீத், இது தொடர்பில் அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.





