மீகொட சந்திக்கு அருகில் வெசாக் தானசாலைக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது கெப் வாகனம் ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (01) இரவு அவிசாவளை – கொழும்பு உயர் மட்ட வீதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் வாகனம், தானசாலை வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்துக்குள் திடீரென பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த ஆண்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்ட ஹன்வெல்ல மற்றும் அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், பெண்கள் 15 முதல் 56 வயதுக்குட்பட்ட பிலியந்தலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சாரதியை, மீகொட சந்தியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 42 வயதுடைய பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த சாரதி, விபத்து நேரத்தில் மதுபோதையில் இருந்தது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்துள்ள 7 பேர் தொடர்ந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 🚔🕯️💔





