‘செனெஹசே கெதெல்ல’ முதியோர் இல்லம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த அங்குருவாதொட்ட பகுதியில் அமைந்துள்ள ‘செனெஹசே கெதெல்ல’ இல்லத்தின் முறையற்ற மற்றும் பிரச்சினைகள் நிறைந்த நிலைமைகள் குறித்து, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இல்லத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகள் குறித்து, மில்லனிய பிரதேச செயலாளர் பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியிருந்ததாக அச்சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுச் செயலகம், சமூக சேவைத் திணைக்களம் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மில்லனிய பிரதேச செயலாளர் கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆரம்பத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த இந்த இல்லத்தில், பின்னர் மனநல பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த இல்லத்தை சுகாதாரப் பாதுகாப்புடன் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு வேலி இல்லாததால் அங்கிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவங்கள் மற்றும் சில மரணங்களும் பதிவாகியுள்ளதாக பிரதேச செயலாளர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இல்லத்தை தானும் தனது அதிகாரிகளும் அவ்வப்போது கண்காணித்து, அதனை முறையான, சுகாதாரமான மற்றும் சுத்தமான முறையில் பராமரிக்குமாறும், கொள்ளளவை மீறி உள்வாங்குபவர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் இல்லத்தின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய போதிலும், அவர்கள் அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை என மில்லனிய பிரதேச செயலாளர் கடந்த பெப்ரவரி மாதம் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், மனநல குறைபாடுள்ள நபர்களை எந்தவொரு ஒழுங்குமுறை அல்லது கண்காணிப்பும் இன்றி தனிப்பட்ட அடிப்படையில் பொறுப்பேற்று நடத்திச் செல்லும் இந்த இல்லம் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு மில்லனிய பிரதேச செயலாளர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore