இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் Ben Stokes மற்றும் வேகப்பந்து வீச்சாளர் Gus Atkinson ஆகியோர் தொடர்புடையதாகக் கூறப்படும் இரவு விடுதி (Nightclub) சம்பவம் குறித்து England and Wales Cricket Board விசாரணை ஆரம்பித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம், அணியின் ஒழுங்குமுறைகளை மீறியதாக கருதப்படுவதாக ECB தெரிவித்துள்ளது.
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த பின்னர், ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் இருவரும் இரவு விடுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விவகாரம் கிரிக்கெட் ஒழுங்குமுறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ECB அறிவித்துள்ளது.
இந்த விசாரணை, அணிக்கு விதிக்கப்பட்டிருந்த நள்ளிரவு ஊரடங்கு விதிமுறையை மீறியதைக் காட்டிலும் தீவிரமான விடயங்களை உள்ளடக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தனது அகாடமி வீரர் ஒருவரை குறித்து ரக்பி கழகமான Saracens தனியாக விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.
ஜூன் 17ஆம் திகதி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணித் தெரிவில் இந்த விசாரணையின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.





