டொமினிக்கனில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் பயங்கர தீ விபத்து

டொமினிக்கன் குடியரசின் பயாஹிபே (Bayahibe) கடற்கரை உல்லாசப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விவா விந்தாம் டொமினிகஸ் பீச் ஹோட்டலில் (Viva Wyndham Dominicus Beach Hotel) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 46 வயதுடைய இத்தாலிய பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஆறு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக​ கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் ஹோட்டல் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அவசரக்கால மீட்புப் பணியாளர்களும் அடங்குவர்.

உள்ளூர் ஊடகங்களால் பகிரப்பட்ட காணொளிகளில், கரீபியன் கடற்கரைக்கு மேலே கரும் புகை மூட்டங்கள் எழுந்து பரவுவதையும், சொகுசு விடுதியின் வைக்கோல் கூரையை தீப்பிழம்புகள் சூழ்ந்து கொள்வதையும் காண முடிந்தது.

“பனை ஓலைகளால் செய்யப்பட்ட கூரை அமைப்புகளின் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை மற்றும் காற்றின் வேகம் காரணமாக தீ மிக வேகமாக பரவியதாக ஆரம்பகட்ட அவதானிப்புகள் தெரிவிக்கின்றன” என்று அந்நாட்டின் அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அதற்கான காரணங்கள் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஹோட்டல் விருந்தினர்கள் அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதே சங்கிலித் தொடர் நிறுவனத்தின் ஒரு பகுதியான ‘விவா விந்தாம் டொமினிகஸ் பேலஸ்’ (Viva Wyndham Dominicus Palace) ஹோட்டலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

தெளிந்த நீர் மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற டொமினிக்கன் குடியரசு, கரீபியன் பிராந்தியத்தின் முதன்மையான சுற்றுலாத் தலமாகும். இது இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 5.6 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore