கலைத்துறை முன்னேற்றத்திற்காகத் தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம்

நமது நாட்டு கலைத்துறை மற்றும் சினிமாவைப்போற்றுப் பாதுகாப்பதற்குப் புதிய வேலைத்திட்டம் ஒன்று அவசியமாகும். பாரம்பரியமானவற்றைப் பாதுகாத்து, சினிமா மற்றும் கலை ஆகிய கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்குத் தேசிய வேலைத்திட்டமொன்று தேவையாகக் காணப்படுகிறது. கலை, சினிமா மற்றும் ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள சாதகமான, முற்போக்கான மாற்றங்கள் மற்றும் புரட்சிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்நாட்டு சினிமா கலைஞர்கள் சங்கத்தின் இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

60, 70-ஆம் தசாப்தங்களில் இருந்த கலைத்துறை 80, 90-ஆம் தசாப்தங்களிலும் அதன் பின்னரும் மாற்றமடைந்து காணப்படுகிறது. இக்கலைத்துறையின் தொன்மை மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களைப் பாதுகாத்து, புதிய கருத்துக்கள், தொழில்நுட்பம் மற்றும் புதிய கட்டமைப்புகளைத் தாபித்து, பழமையையும் புதுமையையும் ஒன்றிணைத்து இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், இச்சினிமா துறைக்காகப் புதிய தொழில்நுட்பம், புதிய கருத்துக்கள் மட்டுமன்றி, நிதி சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பழைய வளங்களையும் நிறுவனங்களையும் பாதுகாப்பதுடன், இதன் எதிர்கால பயணத்திற்கு அரசாங்கத்தின் தலையீடு, தனியார் தலையீடு மட்டுமன்றி, அரச மற்றும் தனியார் ஆகிய இரு பிரிவினரும் ஒன்றிணைந்து பயணிக்கும் ஒருங்கிணைந்த பயணம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.இக்கலைத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட சலுகை வட்டியிலான கடன் திட்டங்களை முன்னெடுக்க முடியும். கடன் வழங்குவது மட்டுமன்றி, இக்கலைப் படைப்புகளைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் குறித்தும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு நடக்காத பட்சத்தில் கலைஞர்கள் கடனாளிகளாகவே மாறிவிடுவர். யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), ஏஐ (AI – செயற்கை நுண்ணறிவு) போன்ற துறைகளைப் போன்றே பாரம்பரிய துறைகளையும் வலுப்படுத்தி இக்கலைத்துறையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, பொதுவானதொரு உடன்பாட்டை எட்ட வேண்டும். இதனை ஒரு அரசியல் பந்தாட்டமாக மாற்றிக்கொள்ளாமல், தேசிய சினிமா வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் தனியார் துறைகள் இரண்டும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது குறித்து பரந்தளவிலான கலந்துரையாடலுக்குச் செல்ல வேண்டும். அதற்கான முறையான கொள்கை சார் மற்றும் நடைமுறை முன்வைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, சிறந்ததொரு கொள்கை வடிவமைப்பை மேற்கொண்டு, கலந்துரையாடலை ஏற்படுத்தி, பரந்த வேலைத்திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஒன்றிணையுங்கள். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தையும் பெற்றுத் தர முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore