அமெரிக்காவின் 10 ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்பு

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger) பன்னோக்கு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, இன்று (23) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.

இரத்மலானை விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, விமானப்படையினரின் உத்தியோகபூர்வ மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அவர் புதிய ஹெலிகொப்டர்களைப் பார்வையிட்டு, அதன் பணியாளர்களுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதன்போது, இலங்கை விமானப்படைக்கும் அமெரிக்க பசிபிக் விமானப்படைக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையொன்றும் கையெழுத்திடப்பட்டது.

இதில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் திலான் குணதிலக்க மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் (Kevin Schneider) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த TH-57 ஹெலிகொப்டர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் விமானி பயிற்சித் திறன்களை மேம்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை விரிவுபடுத்தவும், அத்துடன் பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் அவசர பொதுச் சேவை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்குத் தேவையான விமானப் பணியாளர்களின் பயிற்சிகளுக்கும் இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து விசேட சரக்கு போக்குவரத்து வசதிகள் மூலம் கடந்த 2026 ஜூன் 01 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஹெலிகொப்டர்கள், இரத்மலானை விமானப்படைத் தளத்தில் வைத்து ஒன்றிணைக்கப்பட்டன.

இலங்கையின் காலநிலை மற்றும் விமான செயல்பாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமான தொழில்நுட்பப் பரிசோதனைகள் மற்றும் சோதன ஓட்டங்களின் பின்னர், இவை உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore