முன்னாள் ஜனாதிபதியின் மகன் ஒருவர் தொடர்புடையதாக கூறப்படும் சொகுசு வாகன கடத்தல் (Luxury Vehicle Smuggling) மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறை (CID) சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அரச பத்திரிகையான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் முன்னாள் ஜனாதிபதி அல்லது சம்பந்தப்பட்ட நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
விசாரணைகள் படி, முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு வாகனங்கள் சுங்க வரி தவிர்த்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சில வாகனங்கள் கப்பல் கன்டெய்னர்களில் மறைத்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அவை அரசியல் தொடர்புடைய நபர்களின் குடும்ப உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சில வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து துறை (Department of Motor Traffic) அதிகாரிகளின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
சில சந்தர்ப்பங்களில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாமல் பின்னர் சுங்க வரி செலுத்தப்பட்டதாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் தொடர்புடைய ஒரு வாகனம் முன்னதாக CID ஆல் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது தற்போது சுங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் அடுத்த வாரம் CID முன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதுவரை பொலிஸ் அல்லது CID அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.





