தேசிய மிருகக்காட்சிசாலை (தெஹிவளை) தனது 90ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் ஜூலை 3, 2026 அன்று பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பொதுமக்கள் பங்கேற்பை மையமாகக் கொண்ட பல்வேறு விசேட நிகழ்ச்சிகளுடன் கொண்டாடவுள்ளது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக, அண்மையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் அறிவிக்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்படும் பெயர்களை முன்மொழிந்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும், பார்வையாளர்கள் சிங்கத் தீவில் (Lion Island) தாயுடன் இருக்கும் சிங்கக் குட்டிகளை நேரில் காணும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், நைல் நீர்யானைக் குட்டி முதன்முறையாக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கு பெயரிடும் போட்டி 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக மட்டும் நடத்தப்படவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்று புதிய அனுபவங்களை பெறுமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
1936 ஜூலை 3 அன்று நிறுவப்பட்ட தெஹிவளை மிருகக்காட்சிசாலை, இலங்கையின் விலங்குகள் பாதுகாப்பு மரபின் முக்கிய அடையாளமாக 90 ஆண்டுகளைக் கடந்துள்ளது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மிருகக்காட்சிசாலையில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பொழுதுபோக்கைத் தாண்டி, விலங்குகள் நலன், அறிவியல் ஆய்வு, அரிய இனப்பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் கல்விக்கான தேசிய மையமாகவும் இது திகழ்கிறது. மேலும், மீன்காட்சியகம், வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் கல்விக் கண்காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவங்களையும் வழங்கி வருகிறது.





