இலங்கையில் முதலீடுகளை அதிகரித்தல், போட்டித்திறனை வலுப்படுத்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கியின் நிர்வாக சபை அங்கீகரித்துள்ளது.
Sri Lanka Reforms for Growth, Resilience and Openness Development Policy Operation (REGROW DPO) என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதி, மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் முதல் கட்டமாகும்.
இந்தத் திட்டம் மூலம்,
வர்த்தக தடைகளை குறைத்தல்,
முதலீட்டுச் சூழலை மேம்படுத்தல்,
நிதித்துறையை வலுப்படுத்தல்,
பெண்களின் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தல்,
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOEs) நிர்வாகத்தை மேம்படுத்தல்,
மின்சாரத் துறையின் போட்டித்திறனை உயர்த்தி சேவைகளை மேம்படுத்தல் மற்றும் மின்சாரச் செலவைக் குறைத்தல்
ஆகிய சீர்திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கப்படவுள்ளது.
உலக வங்கியின் இலங்கைக்கான நாட்டுப் பணிப்பாளர் கெவோர்க் சார்க்சியன் தெரிவிக்கையில், “இலங்கை தனது பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இப்போது தனியார் முதலீடுகளை ஈர்த்து, உயர்மதிப்புள்ள ஏற்றுமதிகளை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது அவசியமாகியுள்ளது” என்றார்.
உலக வங்கி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. தற்போது கல்வி, சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 13 திட்டங்களை ஆதரித்து வருகிறது.
மேலும், உலக வங்கியின் தனியார் துறை அங்கமான IFC, 2021 முதல் 2026 வரை இலங்கையின் தனியார் துறைக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அண்மையான நீண்ட மற்றும் குறுகிய கால நிதி உதவிகளை வழங்கியுள்ளது.





