காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது மக்களுக்காகச் செய்யும் ஒரு கடமையாகவும் அத்தியாவசியமான காரணியாகவும் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், உணவு மற்றும் நீர் பாதுகாப்புக்கும் முக்கியமானதாக காணப்படுவதோடு, தேசிய பாதுகாப்பிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினையாகவும் காணப்படுகின்றது.
இதனால் முன்கூட்டியே திட்டமிட்ட முகாமைத்துவ கட்டுப்பாட்டு ஒழுங்குகளை நோக்கிச் செல்வதற்குப் பல்வேறு தரப்பினருடன் பொதுவான இணக்கப்பாட்டை எட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் அதன் இணைத் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அபேவிக்ரம ஆகியோர்களினது தலைமையின் கீழ் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரங்கள் பாராளுமன்ற அமர்வுகள் கூடுகின்றன. ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தொடரிலும் இந்த ஒன்றியம் ஒரு நாள் கூட வேண்டும்.
ஒரு தனிநபரின் காரியத்துக்காக இவ்வாறு இங்கு கூடவில்லை. காலநிலை தொடர்பான விஞ்ஞானிகள், அறிஞர்கள், சுயாதீன ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் இணைந்து கொண்டுள்ளனர்.
கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த ஒன்றியம் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இங்கு மேலும் கலந்துரையாடப்பட வேண்டும்.
சுற்றாடல் விவகாரங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அறிவார்ந்த மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை மையமாகக் கொண்ட ஒரு வினைத்திறனான வேலைத்திட்டத்தை நோக்கி நகர்ந்து, ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னர், அதாவது அனர்த்தத்திற்கு முன்னர் தயாராகும் வகையிலான ஒரு நாட்டை உருவாக்குவது குறித்து இந்த ஒன்றியம் கூடிய அவதானம் செலுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) நிலைமைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இம்முறை பெரும் போகத்திற்கு இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அடுத்தடுத்த போகங்களுக்கு அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
எமக்கு பழகிப்போகாத காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் போலவே நிலவரங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.





