சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் 5 மற்றும் 6ஆம் மதிப்பாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கான அனுமதியை இலங்கை பெற்றிருப்பதை Ceylon Chamber of Commerce வரவேற்றுள்ளது.
இந்த ஒப்புதல், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை மற்றும் மத்திய கிழக்கு மோதலால் உருவாகியுள்ள வெளிப்புற அழுத்தங்கள் காணப்படும் முக்கிய தருணத்தில் கிடைத்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
மேலும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் ஆதரவாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முதலீட்டு சூழல், போட்டித்திறன், உட்கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் சபை வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, எரிபொருள் விநியோகத்தில் செயல்திறன் மற்றும் இலக்கு அடிப்படையிலான ஆதரவை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருள் QR முறைமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், செலவின அடிப்படையிலான விலை நிர்ணயக் கொள்கையை தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக தெளிவான மற்றும் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம் இடம்பெறுவது சந்தை நம்பிக்கையையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த உதவும் எனவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, தளவாட சேவைகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் சிலோன் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.





