சம்மாந்துறை முஸ்லிம் மக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய சில இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் பெண் மாணவிகளை தொந்தரவு செய்தல், அனுமதியின்றி புகைப்படம் எடுத்தல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தல், இருவருக்கு மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்வல், போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வீதிகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்துதல், ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுதல் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜும்ஆ மற்றும் ஐவேளை தொழுகைகளுக்காக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பலர் தலைக்கவசம் அணியாமல் செல்வதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ள நிலையில், கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மீறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கையாளர் சபை எச்சரித்துள்ளது.






