சம்மாந்துறை அலிவண்ணியார் வீதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த, நீண்டகாலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 36 மற்றும் 22 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு வழக்குகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்கள் எனவும், நேற்று (3) பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையிலும், அந்த சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை தாக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸார் அவதானமாகவும் சூட்சுமமாகவும் செயல்பட்டு அவர்களை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த கைது நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கு அமைய,
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் வழிகாட்டுதலில்,
ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.





