ஹொரணை பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், வங்கியின் உதவி முகாமையாளரும் பாதுகாப்பு அதிகாரியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 3ஆம் திகதி, வங்கியின் கிளைகளுக்கு அனுப்புவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த பணம் வங்கி வளாகத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டபோது, அடையாளம் தெரியாத நபரால் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவரும் ஜூன் 5ஆம் திகதி அங்குருவத்தோட்டை மாநகர சபை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியாக சந்தேகிக்கப்படும் 17 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
43 மற்றும் 54 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் முறையே ஹொரணை மற்றும் புளத்சிங்கள பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களில் ஒருவர் வங்கியின் உதவி முகாமையாளராகவும், மற்றையவர் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியதுடன், கொள்ளைச் சம்பவத்திற்கு துணைபோனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.





