தென் லெபனானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இஸ்ரேலிய வான்தாக்குதலில், இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மற்றும் பிராந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஹ்மா என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், அப்பகுதியில் நிலவும் மோதல் சூழ்நிலையிலும் அங்கிருந்து வெளியேற மறுத்து, கைவிடப்பட்ட தெரு பூனைகள் மற்றும் நாய்களை பராமரிப்பதற்காக அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடக பதிவுகள் மற்றும் பிராந்திய ஊடக தகவல்களின்படி, தென் லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலின் போது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
போர் நிறுத்த உடன்படிக்கை அமலில் இருந்தபோதிலும், தென் லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்வதாகவும், அண்மைய தாக்குதல்களில் பல பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பாக இலங்கை அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவில்லை.





