மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலின் பொருளாதார தாக்கம் காரணமாக, இலங்கையில் மேலும் 13 இலட்சம் பேர் (1.3 மில்லியன்) தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் World Food Programme (WFP) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின்படி, எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் உரங்களின் விலையேற்றம் காரணமாக, அண்மைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை குடும்பங்கள் மேலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.
மத்திய கிழக்கிலிருந்து 63% எரிசக்தியையும், வளைகுடா நாடுகளிலிருந்து 44% பணப்பரிமாற்ற வருமானத்தையும், 45% தேயிலை ஏற்றுமதி வருமானத்தையும் இலங்கை பெற்றுவருவதால், அந்தப் பிராந்தியத்தில் ஏற்படும் பொருளாதார அதிர்வுகளுக்கு இலங்கை அதிகளவில் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஏற்கனவே 47 இலட்சம் பேர் (4.7 மில்லியன்) உணவுப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போதைய நெருக்கடி தொடர்ந்தால் மேலும் 13 இலட்சம் பேர் அந்த பட்டியலில் சேரக்கூடும் என WFP தெரிவித்துள்ளது.
“இந்த நெருக்கடி உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பசியின் பாதைக்கு தள்ளக்கூடும் என நாம் முன்பே எச்சரித்திருந்தோம். தற்போது அது நேரடியாக நிகழ்வதை காண்கிறோம். குறிப்பாக உலகின் ஏழை குடும்பங்களே மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்” என WFP உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு சேவையின் பணிப்பாளர் ஜீன்-மார்டின் பவுயர் தெரிவித்துள்ளார்.
உணவு, எரிபொருள் மற்றும் உர விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடும்பங்களின் வருமானம் போதாமையாக மாறி, தேவையான அளவு மற்றும் தரமான உணவைப் பெற முடியாத நிலை உருவாகி வருவதாகவும் அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், இந்த நெருக்கடி நீடித்தால் உலகளாவிய மனிதாபிமான உதவி நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், 2026 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டதை விட 15 இலட்சம் பேருக்கு குறைவாகவே உதவி வழங்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்றும் WFP தெரிவித்துள்ளது.





