தனியுரிமை மற்றும் குறியாக்க (Encryption) வசதிகளுக்குப் பெயர்போன செய்தியிடல் செயலியான Signal, குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்கும் நோக்கில் பிரித்தானியா முன்வைத்துள்ள புதிய திட்டங்கள் தனியுரிமை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.
ஜூன் 8ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளை பாதுகாப்பது அவசியமானதுதான் என்றாலும், கட்டாய வயது உறுதிப்படுத்தல் (Age Verification) மற்றும் சாதனங்களில் உள்ளடக்கங்களை ஸ்கேன் செய்யும் நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்காது என Signal தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் நிர்வாணப் படங்களை கண்டறியும் வகையில் உள்ளடக்கங்களை ஸ்கேன் செய்வதும், அதனுடன் வயது உறுதிப்படுத்தல் முறைகளையும் இணைப்பதும் எதிர்காலத்தில் பிற உள்ளடக்கங்களையும் கண்காணிக்கக்கூடிய கருவிகளாக மாறும் அபாயம் இருப்பதாக Signal சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் மீது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டுப்பாட்டை அதிகரிக்கக்கூடும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களில் நிர்வாணப் படங்களுக்கான அணுகலைத் தடுக்க Apple மற்றும் Google போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, குழந்தைகள் நிர்வாண அல்லது பாலியல் வெளிப்படையான படங்களை எடுக்கவும், அனுப்பவும் அல்லது பார்வையிடவும் முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களை செயல்படுத்த அல்லது மென்பொருட்களை புதுப்பிக்க நிறுவனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு கண்காணிப்பு முறைகளை உருவாக்குவதற்குப் பதிலாக கல்வி, சமூக சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதே சிறந்த தீர்வாகும் என Signal வலியுறுத்தியுள்ளது.





