பாரதிராஜாவை டிரெண்ட் செட்டராக மாற்றிய படம் பற்றி தெரியுமா?

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைந்தாலும் அவரின் படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும். அந்த வகையில் அவர் கொடுத்த மாஸ்டர் பீஸ் படத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’ திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல். இந்தப் படம் வருவதற்கு முன் இருந்த தமிழ் சினிமாவும், வந்த பிறகு இருந்த தமிழ் சினிமாவும் வேறு என்று சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு திரைப்படங்களின் காட்சிப்படுத்தல் முறையையும், கதையமைப்பையும் மாற்றியமைத்த படைப்பாக இன்றளவும் நினைவுகூரப்படுகிறது இந்த திரைப்படம்.

இயக்குநர் பாரதிராஜா தனது முதல் படைப்பிலேயே தமிழ் திரையுலகிற்கு புதிய அடையாளத்தை வழங்கினார். அதுவரை பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோக்களிலும், செயற்கையாக அமைக்கப்பட்ட செட்களிலும் படமாக்கப்பட்டு வந்த நிலையில், கிராமத்தின் உயிர்நாடியான மண்வாசனையை திரையில் கொண்டு வந்தார். இயற்கை வெளிச்சம், உண்மையான கிராம சூழல் மற்றும் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் அவர் ஒரு புதிய சினிமா டிரெண்டை உருவாக்கினார்.

1977 ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தன. கிராமத்து இளைஞனான சப்பாணி, கனவுகளால் நிரம்பிய மயில் மற்றும் முரட்டுத்தனமான பரட்டை ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றியே கதை நகரும். பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் ஆசிரியையாக வேண்டும் என்ற கனவை சுமந்து வாழும் மயில், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் பேச்சால் நகர வாழ்க்கை மீதான ஆசைகளில் மூழ்குகிறாள். அதே நேரத்தில், சிறு வயதிலிருந்தே மயிலை மனதார நேசிக்கும் சப்பாணி, தனது காதலை வெளிப்படுத்தாமல் அவளைச் சுற்றியே வாழ்கிறான்.

இந்நிலையில் கிராமத்திற்கு வரும் மருத்துவரிடம் மயில் மனதை பரிகொடுக்கிறார். ஆனால் அந்த மருத்துவர் மயிலை காதலித்து ஏமாற்றிவிடுகிறார். இது அவளது வாழ்க்கையில் பெரும் திருப்பமாக அமைகிறது. ஊர்மக்களின் பேச்சுக்கள் மயிலை மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. குருவம்மாவின் மரணத்திற்குப் பிறகு மயிலின் பாதுகாப்புப் பொறுப்பு சப்பாணியின் தோள்களில் விழுகிறது. மயிலின் வாழ்க்கையை மீண்டும் அமைத்துக் கொடுக்க முயலும் சப்பாணி, அவளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயார் ஆகிறான்.

இறுதிக்கட்டத்தில் பரட்டையின் கொடூர முயற்சியிலிருந்து மயிலை காப்பாற்றும் சப்பாணி, அதற்காக சிறை செல்ல நேரிடுகிறது. ஒருநாள் சப்பாணி திரும்பி வந்து தனது வாழ்க்கையை முழுமையாக்குவார் என்ற நம்பிக்கையுடன் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மயிலின் காட்சியுடன் படம் முடிகிறது. அந்த முடிவு ரசிகர்களின் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது.

கதை மட்டுமல்லாமல், இந்த படத்தின் பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாதவை என்ற பெருமையை பெற்றுள்ளன. குறிப்பாக எஸ்.ஜானகி பாடிய ‘செந்தூரப் பூவே’ பாடல் தேசிய விருதை வென்று சாதனை படைத்தது.

அதேபோல் படத்தில் இடம்பெற்ற உரையாடல்கள் மக்களின் அன்றாட பேச்சு வழக்கின் ஒரு பகுதியாக மாறின. குறிப்பாக ‘இது எப்படி இருக்கு?’ என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

வெளியான காலத்தில் வசூல் வெற்றியையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற ‘16 வயதினிலே’, இன்று 46 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்றாக பேசப்படுகிறது. ஒரு கிராமத்து கதையை உலகம் முழுவதும் ரசிக்க வைத்த பாரதிராஜாவின் இந்த படைப்பு, தமிழ் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் தனித்த இடம் பெற்றிருக்கும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore