மத்திய மாகாணத்தில் உள்ள மூன்று முக்கிய மண்டலங்களை உள்ளடக்கிய விரிவான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. உயிரினப் பல்வகைமையும், பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட இடங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுவதே இதன் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் தொடர்பான கலந்துரையாடல் சமீபத்தில் மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆளுநர் பேராசிரியர் S.B.S. அபேகூன் தலைமை தாங்கினார். மேலும் ஐ.நா. அபிவிருத்தி திட்ட (UNDP) தேசிய திட்ட மேலாளர் ஆஷோகா அஜந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாண சபை பல இடங்களை சுற்றுலா ஈர்ப்பிடங்களாக மேம்படுத்தத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், இந்த திட்டம் UNDP மற்றும் சுற்றுலா துறை இணைந்து செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பகுதிகளில் மினிப்பே, பான்வில, உடுதும்பர, மெடதும்பர, தம்புள்ள, அம்பகமுவ, நோர்வுட், லக்கல-பலேகம மற்றும் மஸ்கெலியா உள்ளிட்ட பகுதிகள் அடங்குகின்றன.
உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் மத்திய மாகாணத்தின் சுற்றுலா துறை மேலும் வலுப்பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





