(மின்மினி மின்ஹா)
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு கடல் வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடைபவனியும் கருத்தரங்கும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் அண்மையில் (08) மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
“கடலைப் பாதுகாப்போம்; எதிர்காலத்தை வளப்படுத்துவோம்” என்ற செய்தியை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கடல் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள், உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு நடைபவனியில் பங்கேற்றதுடன், கடல் சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எம். ஹிருபஹான் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டதுடன், உப அதிபர் எம்.எஸ். நப்ஃபார், மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் கே. சிவகுமார், பாடசாலையின் உப அதிபர்கள், துறைசார் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு, சுற்றாடல் அமைச்சு ஜூன் 1 முதல் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியை தேசிய சுற்றாடல் வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதனையொட்டி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கடல் மாசுபாட்டைத் தடுப்பது, அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.





