‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் சுகாதார நிலை குறித்து உடனடியாக கவனம் செலுத்துமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சுரேஷ் சலே அவர்களின் சுகாதார நிலை மோசமடைந்து வருவது குறித்து ‘சர்வஜன அதிகாரம்’ கட்சி தனது பலத்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு துணிச்சலான இராணுவ வீரராக அவர் ஆற்றிய தனித்துவமான சேவையை பாராட்டுவதுடன், தேசத்திற்காக அவர் செய்த அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் எவராலும் மறந்துவிட முடியாது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகையதொரு வீரருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது தங்களது கட்சியின் நம்பிக்கை என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கிலும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக கவனம் செலுத்தி, தாமதமின்றி தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வஜன அதிகாரம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

“எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, அவரது சுகாதார நிலை நாளுக்கு நாள் மிக வேகமாக மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் விடுத்துள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது, அவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பித்த தரப்பு என்ற வகையில் உங்களது நேரடிப் பொறுப்பாகும் என நாங்கள் கருதுகிறோம்.

காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் அடிப்படை மனித உரிமைகளையும் சுகாதாரப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும்.

சுரேஷ் சலே அவர்களின் சுகாதார நிலை தொடர்பாக ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அது உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேச ரீதியிலும் இலங்கையின் பிம்பத்திற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக நாட்டின் மீதுள்ள நம்பகத்தன்மைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எங்களது நிலைப்பாடாகும். அத்துடன், தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்த அதிகாரம் என்ற வகையில் அதன் நேரடிப் பொறுப்பு உங்கள் மீதே சுமத்தப்படும்.”

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore