புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: மூவருக்கு மரண தண்டனை உறுதி; இருவர் விடுதலை!

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது.

அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் புங்குடுதீவு மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது 07 பேரைக் குற்றவாளிகளாகக் கண்ட ‘ட்ரயல் அட் பார்’ (Trial-at-Bar) தீர்ப்பாயம், அவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பினை எதிர்த்து 07 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணை முடிவில், இருவரை உயர் நீதிமன்றம் விடுவித்ததுடன், ஏனைய ஐவரின் மரண தண்டனையையும் உறுதி செய்தது.

எனினும், வழக்கு விசாரணைக் காலத்திலேயே மரண தண்டனைக் கைதி ஒருவர் சிறையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

ஏனைய நால்வரின் தண்டனையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி அந்நால்வரில் ஒருவர் சிறைக்குள் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதனால், தீர்ப்பினை உறுதி செய்வதற்காக அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் இருவர் தற்போது உயிருடன் இல்லாததால், சிறையில் உள்ள ஏனைய மூவருக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மேல் நீதிமன்றம் வாசித்துக் காட்டி உறுதிப்படுத்தியது.

அதேநேரம், உயர் நீதிமன்றத்தினால் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய இருவரையும் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore