வியட்நாமில் பூனைகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிருடன் இருந்த 400-க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஹோ சி மின் நகர காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 400-க்கும் அதிகமான உயிருள்ள பூனைகளும், பனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 80 இறந்த பூனைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் வேறொரு இடத்தில் இருந்து 21 பூனைகளும் மீட்கப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாக தென் வியட்நாமின் பல பகுதிகளில் பூனைகளை திருடி சேகரித்து வந்த கும்பலாக இவர்கள் செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் பல இடங்களில் பூனைகளை வலையில் பிடித்து திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
வியட்நாமில் பூனை மற்றும் நாய் இறைச்சி உண்பது சட்டபூர்வமானதாக இருந்தாலும், அவற்றின் மூலத்தை நிரூபிக்கும் சான்றிதழ்கள் விற்பனையாளர்களிடம் இருக்க வேண்டும். கைது செய்யப்பட்ட இந்தக் கும்பலிடம் அவ்வாறான ஆவணங்கள் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.
சர்வதேச விலங்கு நல அமைப்பான Humane World for Animals தெரிவித்ததாவது, மீட்கப்பட்ட பூனைகளில் குறைந்தது 40 பூனைகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனினும், மீட்கப்பட்ட பூனைகளில் சுமார் 100 பூனைகள் கடுமையான துன்புறுத்தலின் காரணமாக பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையின் பாதுகாப்பில் உள்ள பூனைகளுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெப்பத்திலிருந்து பாதுகாக்க மின்விசிறிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த சம்பவம் வியட்நாமில் செல்லப்பிராணி திருட்டு மற்றும் விலங்கு நலன் தொடர்பான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.





