அமெரிக்கா–ஈரான் இடையே போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் வழங்கல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் வியாழக்கிழமை (18) எண்ணெய் விலைகள் சுமார் 2% வீழ்ச்சியடைந்தன.
பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) ஒரு பீப்பாய்க்கு 1.59 அமெரிக்க டொலர் குறைந்து 77.96 டொலராகவும், WTI கச்சா எண்ணெய் 1.83 டொலர் குறைந்து 74.96 டொலராகவும் வர்த்தகமானது.
இந்த விலை வீழ்ச்சி, ஈரான் போருக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த மட்டமாக கருதப்படுகிறது.
சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, அமெரிக்கா–ஈரான் இடையே எட்டப்பட்ட 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) காரணமாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ்:
🔹 ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படும்
🔹 30 நாட்களுக்குள் கடல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும்
🔹 60 நாட்களுக்குள் இறுதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்
Goldman Sachs வங்கியின் கணிப்பின்படி, வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி ஜூலை மாத இறுதிக்குள் போருக்கு முந்தைய நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜீவா, எண்ணெய் விலைகள் மேலும் குறையக்கூடும் என்றாலும், நாடுகள் தங்கள் கையிருப்புகளை நிரப்பத் தொடங்குவதால் விலைகள் திடீரென சரியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எண்ணெய் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.





