சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா–இரான் பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து, உலக சந்தையில் எண்ணெய் விலை திங்கள்கிழமை குறைந்தது. விநியோக பற்றாக்குறை குறையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியதால் விலை சரிவை கண்டது.
Brent கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $1.19 (1.48%) குறைந்து $79.38 ஆக பதிவானது. பேச்சுவார்த்தை தொடக்கத்தில் நிலவும் பதற்றத்தால் விலை $82.30 வரை உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போர் நடவடிக்கை எடுக்கலாம் என எச்சரித்ததும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை தற்காலிகமாக மூடியதாக அறிவித்ததும் சந்தையில் அதிர்வை ஏற்படுத்தியது.
அமெரிக்க West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெய் விலை $76.73 ஆக பதிவாகி 13 சென்ட் உயர்ந்தது. இருப்பினும் ஆகஸ்ட் மாத ஒப்பந்த விலை $75.64 ஆக 21 சென்ட் குறைந்தது.
வல்லுநர்கள், அமெரிக்கா–ஈரான் இடையிலான சமரச முயற்சிகள் முன்னேற்றம் காணும் வாய்ப்பு இருப்பதால் எண்ணெய் விலை குறைந்ததாக தெரிவித்துள்ளனர். இது ஈரான் மீதான தடைகள் தளர்வதற்கும் வழிவகுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது, எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஏற்றுமதிக்கு விலக்கு கிடைத்துள்ளதாகவும், முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் தினமும் சுமார் 15 லட்சம் பேரல் எண்ணெய் உலக சந்தைக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
எனினும் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் இன்னும் நீடிப்பதாகவும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாற்றம் அடையலாம் என ING ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த வாரமே எண்ணெய் விலை 8%க்கும் மேல் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. UAE, குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளும் உற்பத்தியை அதிகரித்து சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முயல்கின்றன.
பேச்சுவார்த்தையின் அடுத்த கட்ட முடிவுகள் உலக எண்ணெய் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





