தற்போது நடைமுறையில் உள்ள Online Safety Act (ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம்) அமுல்படுத்த அரசாங்கத்திற்கு எந்தவித நோக்கமும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக திருத்தங்களுடன் கூடிய புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தச் சட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே தங்களது தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதில் பாரிய மாற்றங்கள் அவசியம் என நம்பியதாகவும் கூறினார்.
“தற்போதைய வடிவிலுள்ள Online Safety Act-ஐ அமுல்படுத்தும் எண்ணம் எமக்கு இல்லை. அதற்கு பதிலாக விரிவான திருத்தங்களுடன் புதிய சட்டமூலத்தை உருவாக்கி வருகிறோம். கடந்த வாரம் அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது,” என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மக்களின் உரிமைகளை பாதிக்கக்கூடிய சட்டங்களை நீக்கவோ அல்லது திருத்தவோ அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், புதிய சட்டமூலம் அடிப்படை உரிமைகள், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களைப் பாதுகாக்கும் வகையில் அமையும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதோடு, ஆட்சியாளர்களை மக்கள் சுதந்திரமாக கேள்வி கேட்கும் உரிமையையும் உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.





