வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கத்திற்குப் பின்னர், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 32 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்தக் குழந்தையை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். நீண்ட நேரம் இடிபாடுகளுக்குள் இருந்தபோதிலும், குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சுமார் 90 நிமிடங்கள் கழித்து, அதே இடிபாடுகளிலிருந்து குழந்தையின் தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டார்.
குழந்தை தனது தந்தையுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும், ஆயிரக்கணக்கான காயமடைந்தோர் மற்றும் காணாமல் போனவர்களையும் ஏற்படுத்திய இந்த பேரிடருக்கிடையில், இந்த மீட்பு நம்பிக்கையை ஏற்படுத்திய அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேலும் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகள், சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





