பேச்சுவார்த்தையை தொடர ஈரான் – அமெரிக்கா இணக்கம்

மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல்களை நிறுத்தவும், ஹோர்முஸ் நீரிணை மீதான தங்களது சர்ச்சை குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

இருதரப்புக்கும் இடையே அடுத்தடுத்து நிகழ்ந்த தாக்குதல்களால் அழுத்தத்திற்குள்ளாகியிருந்த இடைக்கால அமைதி உடன்படிக்கையைக் காப்பாற்றுவதற்கான நம்பிக்கையை இது அதிகரித்துள்ளது.

ஜூன் 17ஆம் திகதி எட்டப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அந்த அதிகாரி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்துப் பிரிவுகள் குறித்தும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளதாக தெரிவித்தார்.

இரு தரப்பினரும் இப்போதைக்கு பின்வாங்குவார்கள், அத்துடன் கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும் என்று கூறினார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய போராளிகள் மீது தாங்கள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், தெற்கு லெபனானில் உள்ள கிராமமொன்றில் அந்த அமைப்பினால் பயன்படுத்தப்பட்ட நிலத்தடி உள்கட்டமைப்புகளை அழித்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை லெபனானுடன் எட்டப்பட்ட புதிய போர்நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலுக்குப் பின்னரே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பிராந்திய அளவிலான பரந்த உடன்படிக்கை நீடிக்க வேண்டுமானால், லெபனானில் நடக்கும் போர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஈரான் கூறுகிறது.

உலகின் மிக முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட சில மணித்தியாலங்களுக்குப் பிறகு, தாங்கள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore