நேற்று ஒரே நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (29) இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகள் அநுராதபுரம், கல்கிரியாகம, சமனலவெவ மற்றும் கிரானேகம ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை அநுராதபுரம் – ரம்பேவ வீதியின் சாலியபுர கல்வல சந்திக்கருகில் ரம்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வலது பக்கமாக திருப்ப முற்பட்ட போது, பின்னால் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருந்தங்குளம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் ஆவார்.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னனெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நேற்று மாலை கலேவெல – கெகிராவ வீதியின் 21ஆம் கிலோமீற்றர் தூணுக்கு அருகில் கெகிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, எதிரே வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், பின்னால் பயணித்தவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஆடியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் ஆவார்.

கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நேற்று நண்பகல் சமனலவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியில் பதுளை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில், அதன் பின்னால் பயணித்தவர் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து பம்பஹின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னால் பயணித்தவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார். பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் நேற்று மாலை கிரானேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – புப்பொகம வீதியின் ஆனகட்டாவ பகுதியில் புப்பொகம திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, லொறியொன்றை முந்திச் செல்ல முயன்றபோது செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார்.

முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிரானேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore