போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசிய திட்டமாக செயல்படுத்த வேண்டும்

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய, நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளோரில் சுமார் 70% போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டதுடன், கடும் பிரச்சனையாக மாறியுள்ள சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதில் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கிடையில் போதை பொருள் பாவனையை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு கேட்டு அறிந்ததுடன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்பூட்டும் வேலை திட்டங்கள் உள்ளிட்ட 225 திட்டங்கள் தற்போது பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உப வேந்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, மாணவர்களுக்கிடையிலேயே குழுக்களை உருவாக்கி விழிப்புணர்வு வழங்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் உரிமையாளர்களை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புக்களை விரைவாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்குவதன் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், வழக்குகளுக்கு தொடர்பான பொருட்கள் முகாமைத்துவத்திற்கான தன்னியக்க கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவது மற்றும் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்கு சட்டத்துறை மற்றும் விஞ்ஞானத் துறையின் நிபுணத்துவ ஆதரவைப் பெற்று, ஆய்வுகூட வசதிகளை பரவலாக்கம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் மற்றும் அவை வழக்குப் பொருட்களாக வைத்திருக்கப்படும் இடங்கள் தொடர்பான முறையான அறிக்கை ஒன்றின் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறவுள்ள கையிருப்புக்கள், பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுள்ள கையிருப்புக்கள் மற்றும் வழக்குப் பொருட்களாகக் காணப்படும் கையிருப்புக்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை பேணுவதில் உள்ள முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அது விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்குத் தள்ளப்பட்டுள்ளார்களா என்பதைத் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளக்கூடிய போதைப்பொருள் பரிசோதனைத் தொகுதிகளை மருந்தகங்கள் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தல், பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகளைத் வினைத்திறன் மிக்கதாகச் செய்தல் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றுதல், மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கடல் மார்க்கமாக போதைப்பொருள் நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்காக கடற்படை, காவல்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் ஒருங்கிணைந்த விசேட செயற்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதுடன், குறிப்பாக படகுகள் மூலம் போதைப்பொருள் விநியோகிக்கும் செயன்முறையை நிறுத்துவது மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உள்ளிட்ட வாகனங்களை அரசுடமையாக்கும் சட்டரீதியான அதிகாரங்களை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore