நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தக் களரியாக்கிய மோதலின் முழுமையான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, “பூரு மூனா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் 28 கைதிகள் தற்போதும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மோதலைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டிருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையானது குறுகிய கால கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகள் ஆகிய இரு தரப்பினரையும் தடுத்து வைக்கும் ஒரு இடமாகும். அங்கு தற்போதைக்கு சுமார் 1800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று மதிய வேளையிலேயே இந்த மோதல் வெடித்திருந்தது. சிறைச்சாலைக்குள் இருந்த இரு எதிரெதிர் குழுக்களுக்கிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, சிறைச்சாலைக்குள் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது, சிறைச்சாலையின் விசேட வார்டுகளின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த விசேட கைதிகள் மீதும் வன்முறையில் ஈடுபட்ட கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், ஒரு குழுவினர் போதை ஏறும் நோக்கில் சிறைச்சாலையிலுள்ள மருந்தகத்தை உடைத்து, அங்கிருந்த வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண் கைதிகள் குழுவொன்று அதன் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபடுவதை காண முடிந்தது. மோதலில் ஈடுபட்ட தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்னால் திரண்ட கைதிகளின் உறவினர்கள் சிலரும் தங்களுக்கு முறையான தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டனர். பின்னர் பொலிஸார் தலையிட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளின் நலம் குறித்து விசாரிப்பதற்காக உறவினர்கள் சிலருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

தற்போது சிறைச்சாலையின் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக கலகத் தடுப்புப் பிரிவு, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் உட்பட பல குழுக்கள் சிறைச்சாலையின் உள்ளேயும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore