இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 61,060 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 39 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் 21,546 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜூலை 5ஆம் தேதி வரை 5,673 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மாகாண வாரியான தரவுகளின்படி, மேல் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த நோயாளர்களில் 52.5% பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கொழும்பு (12,445) மற்றும் கம்பஹா (12,282) மாவட்டங்கள் அதிக பாதிப்பை பதிவு செய்துள்ளன.
மேலும் மாத்தறை, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 142 MOH பிரிவுகள் உயர் ஆபத்து மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரத்திற்கு சராசரியாக 2,600-க்கும் அதிகமான புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த, கொசு பெருகும் இடங்களை அழிப்பதில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், புகைமூட்டல் (Fogging) மட்டும் போதுமான தீர்வாகாது என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





