சம்மாந்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக திருட்டு மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்து, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், குறிப்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளுக்குள் நுழைந்து மின்வயரிங் இணைப்புகளை திருடிச் செல்வதோடு, கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பள்ளிவாசல் நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரினால் நம்பிக்கையாளர் சபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதுடன், கால்நடைகள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள், நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட திருட்டுச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் நம்பிக்கையாளர் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





