பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக சரக்கு விமானம், அதன் வழிகாட்டும் அமைப்பில் (Navigation System) ஏற்பட்ட கோளாறு குறித்து அறிவித்த பின்னர், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாக பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்த போது விமானத்தில் ஐந்து பணியாளர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானக் கண்காணிப்புச் சேவையான ‘Flightradar24’ இன் முதற்கட்ட தரவுகளின்படி, 27 ஆண்டுகள் பழமையான இந்த விமானம் கராச்சி நகருக்கு தென்மேற்கு கடல் பகுதியை நெருங்கும்போது அதன் உயரத்தை திடீரென பலமுறை மாற்றியுள்ளதுடன், அதன் பின்னர் மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கியுள்ளது.
எனவே இந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து குறித்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விமானம் மற்றும் அதன் பணியாளர்களின் நிலை குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.





