எல் நினோவின் தற்போதைய நிலை குறித்து வௌியான அறிவிப்பு

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இது வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின்படி, இந்த ‘எல் நினோ’ நிலை காரணமாக இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று அந்தத் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டினார்.

வளிமண்டலவியல் திணைக்களம் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2027 ஜனவரி வரை ‘எல் நினோ’ நிலை மிகவும் தீவிரமடைவதற்கு 63% வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும், அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA), இது தீவிரமடையாமல் இருப்பதற்கும் மூன்றில் ஒரு பங்கு (1/3) வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

இந்த நிலையினால் தற்போதுள்ள தென்மேற்கு பருவமழை குறைவடையக்கூடும் என்று சுட்டிக்காட்டிய மெரில் மெண்டிஸ், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான மழையளவை விட அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள நீர் கொள்ளளவு மற்றும் எதிர்காலத்தில் கிடைக்கப்பெறவுள்ள மழைவீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, நீரை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதன்படி, விவசாய நடவடிக்கைகள், மின்சார உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்காக நீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இந்தக் காலநிலை மாற்றத்திற்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக அனைத்து அமைச்சுகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்திகே தெரிவித்துள்ளார்.

‘எல் நினோ’ தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்காக, எதிர்வரும் பெரும் போக விவசாய நடவடிக்கைகளை உரிய காலத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்குமாறு விவசாயிகளிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore