நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் செயலாளரால் கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடுவதற்காகவும், உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காகவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவால் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று விசேட பொதுச் சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது பதவி விலகல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து நீதிச் சேவை சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் தலைவர் பசன் அமரசேன அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இதற்கிடையில், தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நிர்ணயிக்கப்பட்டபடி சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று நடைபெறும் என்று செயலாளர் தனது கடிதத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.
அதன்படி, நீதிச் சேவை சங்கத்தினால் அழைக்கப்பட்ட பொதுச் சபை கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஆரம்பமானதாக ‘அத தெரண’ செய்தியாளர் தெரிவித்தார்.





