அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவுடன் இணைந்து அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான ஆரம்ப விழா இன்று (22 “ஆகஸ்ட்” 2026) காலை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் இடம்பெற்றது.


அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். முஹம்மது ஹனீபா மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr. எ.ஆர்.நியாஸ் அஹமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
”மனித உயிர் காப்போம்… சமூகத்தைப் பாதுகாப்போம்…” என்ற உன்னத கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 50 இளைஞர்கள் இரண்டாம் கட்டப் பயிற்சிக்காகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்து ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.


கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அவசர கால மீட்புப் பணிகளின் அவசியமும், பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பதில் பயிலுனர்களின் பங்கு குறித்தும் சிறப்புரையாற்றினர்.
தன்னாசியுடன் மனித உயிர்களைக் காக்கும் இத்தகைய உயரிய சேவையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள இளைஞர்களுக்கு இதன்போது வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டதுடன், பயிற்சிகள் தொடர்பான அடுத்த கட்ட முன்னெடுப்புகளும் எமது அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டன.










