கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்திருந்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மத்தியில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவும் டென்மார்க்கும் புதிய உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்து, டென்மார்க் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை குறிப்பாக ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பிராந்தியங்களில் வலுப்படுத்தும் என டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஒப்பந்தத்தின் முழுமையான ஆவணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் கூற்றுப்படி, இந்த உடன்பாடு அமெரிக்காவுக்கு கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நீண்டகால உரிமைகளை வழங்குகிறது. மேலும், அமெரிக்காவின் வெளிப்படையான அனுமதியின்றி அமெரிக்காவின் எதிரி நாடுகள் கிரீன்லாந்தில் இராணுவ இருப்பை ஏற்படுத்துவதற்கும் முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கும் தடைகள் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின்படி, கிரீன்லாந்து எதிர்காலத்தில் சுதந்திர நாடாக மாறினாலும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகாது. மேலும், கிரீன்லாந்து அல்லது டென்மார்க்கின் மேலதிக அனுமதியின்றி அமெரிக்கா அங்கு புதிய இராணுவ கட்டமைப்புகளை அமைக்கக்கூடிய உரிமைகளும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரெடெரிக் நீல்சன் ஆகியோர், இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்தின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் சீனா போன்ற அமெரிக்காவின் போட்டி நாடுகள் கிரீன்லாந்தில் இராணுவத் தளங்களை அமைப்பதற்கும் சில முக்கிய துறைகளில் முதலீடு செய்வதற்கும் இந்த உடன்பாடு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
கிரீன்லாந்தில் ஏற்கனவே அமெரிக்காவின் Pituffik இராணுவத் தளம் செயல்பட்டு வருகிறது. மேலும், அரிதான கனிம வளங்கள் அதிகளவில் காணப்படும் கிரீன்லாந்தின் மூலோபாய முக்கியத்துவமும் இந்த விவகாரத்தில் முக்கிய காரணியாக உள்ளது.
ஒப்பந்தத்தின் முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், இது நடைமுறைக்கு வருவதற்கு டென்மார்க் நாடாளுமன்றம் உள்ளிட்ட தேவையான சட்ட நடைமுறைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





