இளம் துடுப்பாட்ட நட்சத்திரமான Vaibhav Sooryavanshi சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தயாராக உள்ளார் என முன்னாள் இலங்கை அணித்தலைவரும் Rajasthan Royals அணியின் தலைமைப் பயிற்சியாளருமான Kumar Sangakkara தெரிவித்துள்ளார்.
நேற்று (29) நடைபெற்ற IPL தகுதிச் சுற்று 2 போட்டியில் Gujarat Titans அணியிடம் ராஜஸ்தான் ரோயல்ஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் வெளிப்படுத்திய திறமையும் மன உறுதியும் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.
“ஒரு வீரர் தயாராக உள்ளாரா என்பதை அவர் களத்தில் இறங்கும் வரை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் வைபவ் காட்டிய ஆட்டத்தை பார்க்கும்போது, அவருக்கு எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இருக்கிறது,” என சங்கக்கார கூறினார்.
மேலும், மிக விரைவில் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சமூக ஊடக அழுத்தங்கள் உள்ளிட்ட வெளிப்புற தாக்கங்களிலிருந்து அவரை பாதுகாக்க ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சங்கக்கார தெரிவித்தார்.
“அவர் அனைத்து அணிக் கூட்டங்களிலும் பங்கேற்கிறார். கவனமாக கேட்கிறார், கருத்துக்களை பகிர்கிறார், நிறைய தயாரிப்புகளை மேற்கொள்கிறார். பந்துவீச்சாளர்களை நன்கு ஆய்வு செய்து பயிற்சியில் கடுமையாக உழைக்கிறார்,” என அவர் குறிப்பிட்டார்.
2026 IPL தொடரில் 16 போட்டிகளில் 776 ஓட்டங்களை குவித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, தற்போது அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கான ‘Orange Cap’ பட்டியலில் முன்னிலையில் உள்ளார். இருப்பினும் இறுதிப்போட்டியில் Shubman Gill மற்றும் Sai Sudharsan ஆகியோருக்கு அந்த எண்ணிக்கையை முந்தும் வாய்ப்பு இன்னும் உள்ளது.





