வெசாக் போயா விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக நாடளாவிய மின்சாரத் தேவை கணிசமாகக் குறைந்துள்ளதுடன், சாதகமான காலநிலையால் கூரைமேல் சூரிய மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதாக தேசிய மின்சார அமைப்பு இயக்குநர் நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தேசிய மின் வலையமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில், சூரிய மின்சார உற்பத்தி உள்ளூர் தேவையை விட அதிகமாக உள்ள பகுதிகளில் சில 33kV மின்விநியோக வழித்தடங்கள் (Feeders) தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
மின்வலையமைப்பில் சமநிலையை ஏற்படுத்துவதற்காக, கூரைமேல் சூரிய மின்சார அமைப்புகளைப் பயன்படுத்துவோர் இன்று (30) காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தன்னார்வ அடிப்படையில் தங்களது அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துமாறு NSO கோரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் பிற்பகல் 3.00 மணியளவில் வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதேபோன்ற நிலைமை நாளையும் (31) தொடரக்கூடும் என எச்சரித்துள்ள NSO, கூரைமேல் சூரிய மின்சார உரிமையாளர்கள் நாளையும் அதே நேரப்பகுதியில் தங்களது அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு மூலம் மேலதிக மின்விநியோக தடைகளைத் தவிர்த்து, அனைத்து நுகர்வோருக்கும் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என NSO தெரிவித்துள்ளது.





