முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முதன்மைச் செயலாளர், கடந்த முறையில் ஒரு லீற்றர் பெட்ரோல் விலை 12 ரூபாயினாலும், இம்முறை 24 ரூபாயினாலும் என, அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் எரிபொருள் விலை 36 ரூபாயினால் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“கடந்த முறை 12 ரூபாயினால் விலை அதிகரித்தபோது, பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் கட்டணத் திருத்தம் எதையும் கோரவில்லை. ஆனால், இம்முறை 24 ரூபாய் போன்ற பெரிய தொகையால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், எங்களால் தொடர்ந்தும் பழைய கட்டணங்களின் கீழ் சேவையை வழங்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எரிபொருள் விலைக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகளுக்கு அத்தியாவசியமான கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டி வகைகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில் கட்டணத் திருத்தம் செய்யப்படாவிட்டால், ஒட்டுமொத்த முச்சக்கர வண்டித் தொழிலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக ரோஹண பெரேரா வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த பொதுச் செயலாளர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் பாதிக்கப்பட்டுள்ள தங்களைப் போன்ற தொழிலதிபர்கள் குறித்து அரசாங்கம் போதிய கவனம் செலுத்துவதில்லை என்றும் மேலும் கூறினார்.

“IMF மூலம் இடி விழும்போது, எங்களை வெளியில் வீசப்படும் இரும்புத் துண்டுகளைப் போலத்தான் இந்த அரசாங்கம் கருதுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore