இறக்காமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் மௌலவி என பொலிஸார் வெளியிட்ட தகவல் தவறானது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) இறக்காமம் கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நபர் அங்கீகரிக்கப்பட்ட மௌலவி அல்ல என்றும், எந்த அரபுக் கல்லூரியிலும் கல்வி கற்றவரும் அல்ல என்றும் ACJU குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவர் ACJU அமைப்பின் அல்லது அதன் இறக்காமம் கிளைகளின் உறுப்பினராகவும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 14 வயது சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக எறகாமத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தலைமறைவாக இருந்த அவர், கடந்த மே 20ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து, ஜூன் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மற்றொரு 21 வயதுடைய இளைஞரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவரும் ஜூன் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எறகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





