கொழும்பு–கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் (E03) வீதி விளக்கு அமைப்பை புனரமைத்து மேம்படுத்துவதற்கான ரூ.1.098 பில்லியன் பெறுமதியான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் தகவலின்படி, திருட்டு மற்றும் சேதப்படுத்தல் காரணமாக தற்போது நெடுஞ்சாலையின் சுமார் 85% வீதி விளக்குகள் செயலிழந்துள்ளதால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளன.
திட்டத்தின் முதல் கட்டமாக, பெலியகொடை, கெரவலப்பிட்டி, சீதுவை மற்றும் ஜா-எல சந்திப்புகளில் வீதி விளக்குகள் மீள நிறுவப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, புதிய களனி பாலம் முதல் பெலியகொடை மீன் சந்தை வரையிலான பகுதியும், சீதுவை முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையிலான பகுதிகளும் ஒளியூட்டப்படவுள்ளன.
இந்த புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் இரண்டு தொகுதிகளாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், தேசிய போட்டி கொள்வனவு நடைமுறையின் கீழ் ஒப்பந்ததாரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இத்திட்டத்திற்கான யோசனையை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.





