ஹொரணை – அங்குருவத்தோட்ட பகுதியில் அமைந்திருந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்களை கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் Upali Pannilage வெளியிட்டுள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, குறித்த முதியோர் இல்லம் சட்டப்படி பதிவு மற்றும் அனுமதி பெறாமல் இயங்கி வந்துள்ளது. முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐந்து பேருக்கு மேற்பட்ட முதியவர்களை தங்க வைக்கும் எந்தவொரு இல்லமும் தேசிய முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
எனினும், தீ விபத்து ஏற்பட்ட இந்த நிறுவனம் தேவையான பதிவு பெறாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 3 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில், இல்லம் முழுமையாக எரிந்து நாசமானதுடன் 12 முதியவர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் பிரதேச செயலக அதிகாரிகள், சமூக சேவை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்தில் உயிர் தப்பியவர்களில் சிலர் அவர்களது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், 8 முதியவர்கள் கதிர்காமத்தில் உள்ள அரசின் “சில்வர் ஏஜ்” மையத்திற்கும், 39 மாற்றுத்திறனாளிகள் அரச பராமரிப்பு நிலையங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் தற்போது 455 முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் 148 மட்டுமே தேசிய முதியோர் செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லங்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் திருத்தச் சட்ட முன்மொழிவுகள் ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





