வளிமண்டலவியல் திணைக்களம் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கான விசேட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (08) காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை அந்தக் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம்.
அதேவேளை, திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையும், கற்பிட்டி முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் 50 – 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
திருகோணமலை – காங்கேசன்துறை மற்றும் கற்பிட்டி – பொத்துவில் கடற்பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பாக காணப்படும் எனவும், ஏனைய கடற்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலையும் ஏற்படக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 🌧️🌊🚤





