வீடுகளில் மட்டுமல்ல ; பொது இடங்களிலும் பெருகும் டெங்கு!

மூன்று நாட்கள் கொண்ட டெங்கு ஒழிப்பு விசேட திட்டத்தின் முதலாம் நாள் சோதனையின் போது, பரிசோதிக்கப்பட்ட ஒட்டுமொத்த 31,196 வளாகங்களில் 2,097 வளாகங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு பிரகடனப்படுத்திய மூன்று நாட்கள் கொண்ட விசேட தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் நேற்று (08) 14 மாவட்டங்களைச் சேர்ந்த 72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஆரம்பமானது.

இந்த முப்பகல் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை (10) வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இன்று அதன் இரண்டாவது நாளாகும்.

நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட வளாகப் பரிசோதனைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, நேற்று சோதனையிடப்பட்ட ஒட்டுமொத்த வளாகங்களின் எண்ணிக்கை 31,196 ஆகும்.

அவற்றில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்களைக் கொண்ட 8,121 வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், 2,097 வளாகங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றைய தினத்தில் 1,165 அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன், 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று 56 பாடசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 31% பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 பாடசாலைகளில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கட்டுமானத் துறையைச் சேர்ந்த 178 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 93 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், 41 இடங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டு, 24 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 189 அரச நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 50 நிறுவனங்களிலேயே டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய 70 அபாயகரமான இடங்களும் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.

பரிசோதிக்கப்பட்ட 96 வழிபாட்டுத் தலங்களில், 18 வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய 42 அபாயகரமான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்றைய தினத்தில் 77 தொழிற்சாலை வளாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றில் 17 தொழிற்சாலைகளில் டெங்கு நுளம்புப் புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த முப்பகல் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நேற்று 28,230 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன், நுளம்புகள் பெருகும் அபாயமுள்ள 7,088 வளாகங்களும், 1,760 வீடுகளில் டெங்கு நுளம்புப் புழுக்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கமைய 657 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தரவுகளின்படி, பாடசாலைகள் மற்றும் கட்டுமானப் பகுதிகள் போன்ற இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான போக்கு மிக உயர்ந்த மட்டத்தில் காணப்படுவது தெரியவந்துள்ளது.

எனவே, தமது சுற்றாடலைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்குப் பொறுப்புடன் செயற்படுமாறும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதுடன், இந்த முப்பகல் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு தங்களால் இயன்ற அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore