கம்போடியாவில் இணைய மோசடி (Cyber Scam) மையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் பின்னர், அந்தக் குற்றவியல் வலையமைப்புகளில் சில இலங்கையின் கடற்கரை சுற்றுலா மையங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாக Bloomberg வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா கட்டணமின்றி நுழையக்கூடிய வசதி, எளிதில் கிடைக்கும் கட்டிட வசதிகள், வலுவான தொலைத்தொடர்பு கட்டமைப்பு மற்றும் “உண்டியல்” போன்ற முறைசாரா பணப் பரிமாற்ற அமைப்புகள் ஆகியவை மோசடி கும்பல்களுக்கு இலங்கையை கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளதாக விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை பொலிஸார் புதிய இணைய குற்றப்பிரிவை அமைத்துள்ளதுடன், இந்த ஆண்டில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மேற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில், 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கொழும்புக்கு அருகிலுள்ள பல்மாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில் மேலும் 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோசடி வலையமைப்புகள் தற்போது பெரிய முகாம்களை விட ஹோட்டல்கள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களை தற்காலிகமாக வாடகைக்கு எடுத்து செயல்படும் முறைக்கு மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க காங்கிரஸ் குழுவொன்றின் கடந்த ஆண்டைய அறிக்கையிலும், பலவீனமான சட்ட அமலாக்கம் மற்றும் வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு கொண்ட நாடுகளை மோசடி வலையமைப்புகள் இலக்காகக் கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தென்கிழக்காசிய மோசடி மையங்களிலிருந்து தப்பிச் சென்ற சிலர் தற்போது இலங்கையில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரக்கூடும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தொலைத்தொடர்பு வசதிகள், சீனர்களின் நீண்டகால இருப்பு, எளிதில் கிடைக்கும் SIM அட்டைகள் மற்றும் “உண்டியல்” பணப் பரிமாற்ற முறை ஆகியவை இந்த வலையமைப்புகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு (FIU) மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மத்திய வங்கி ஆளுநர் Nandalal Weerasinghe தெரிவித்துள்ளார்.
இணைய மோசடி வலையமைப்புகள் இலங்கையில் வேரூன்றுவதைத் தடுக்க, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் அனுபவங்களை இலங்கை பின்பற்ற வேண்டியது அவசியம் என சர்வதேச நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





