இங்கிலாந்தில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய 37 வயதான ஜேமி வர்லி (Jamie Varley), தத்தெடுக்கப்பட்ட 13 மாத ஆண் குழந்தையை கொலை செய்ததற்கும், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கும் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வர்லி மற்றும் அவரது துணைவர் ஜான் மெகோவன்-ஃபசேகர்லி (32) ஆகியோர், பிரெஸ்டன் டேவி என்ற குழந்தையை 9 மாத வயதில் சட்டபூர்வமாக தத்தெடுத்திருந்தனர்.
ஆனால், அவர்களின் பராமரிப்பில் இருந்த நான்கு மாதங்களுக்குள், குழந்தை தொடர்ந்து உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், 40-க்கும் மேற்பட்ட கடுமையான காயங்களையும் சந்தித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எட்டு வாரங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு:
ஜேமி வர்லி மீது கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தை மீதான கொடுமை, கடுமையான உடல் காயம் ஏற்படுத்தல் மற்றும் குழந்தையின் ஆபாச புகைப்படங்கள்/வீடியோக்களை தயாரித்தல் மற்றும் பகிர்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
ஜான் மெகோவன்-ஃபசேகர்லி மீது குழந்தையின் மரணத்தைத் தடுக்கத் தவறியமை, குழந்தை மீதான கொடுமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது ஜேமி வர்லி உணர்ச்சி வசப்பட்டு வாந்தியெடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் தாயாரும் பாட்டியும் தீர்ப்பின் போது கண்ணீர் மல்க இருந்தனர்.
இருவருக்கும் விதிக்கப்படும் தண்டனை பின்னர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்படவுள்ளது.





