சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில், பங்களாவடி பகுதியில் அமைந்துள்ள Persank Clothing (Pvt) Ltd. ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 75 பெண் ஊழியர்களுக்காக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு (19) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், குடும்ப வன்முறைகள், பாலியல் தொல்லைகள், போதைப்பொருள் பாவனையின் தீமைகள், இணையவழி மோசடிகள், பெண்களின் சட்ட உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் தங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கக்கூடிய அபாயங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்கும் முறைகள், அவசர சூழ்நிலைகளில் பொலிஸாரின் உதவியைப் பெறும் வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பு ஆகியன தொடர்பாகவும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் WSI வீரக்கொடி (PS 43494), WPS விஜேரத்ன (2472) மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நிலாந்தி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் (OIC) நிசாந்த பிரதீப் குமார தலைமையில் சிறப்பாக நடைபெற்றதுடன், கலந்து கொண்ட பெண் ஊழியர்கள் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூகத்தில் பெரும் பயனளிப்பதாக தெரிவித்தனர்.
போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சமூக குற்றங்களைத் தடுப்பதற்காக எதிர்காலத்திலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.







